இந்த மாதம் 29ம் தேதி ஒரு அழகிய [அழகில்லாத குழந்தை என்று ஒன்று உண்டா என்ன?] பெண் குழந்தைக்கு அப்பாவானேன். சென்ற வருடம் இதே மாதத்தில் பெரியப்பா ஆனதை தொடர்ந்து இந்த வருடம் அப்பா ஆகியிருக்கிறேன். இப்போது எனக்கு இரு மகள்கள். எந்தக் குழந்தையாய் இருந்தாலும் சந்தோசம் என்றாலும் ரகத்துக்கு ஒரு மிட்டாயை கையில் எடுக்கும் குழந்தையை போல, ஒரு பெண் இருக்கிறாள், இனி ஒரு பையன் வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் மனைவியிடம் இப்படி பாட்டுப் பாடி மிரட்டிக் கொண்டிருந்தேன்! 

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னை போலவே இருப்பான் [இது ஒன்று போதாது?]
தனக்கொரு பாதையை வகுக்காமல் தறு - 
தலையை போலவே திரிவான்!

அவள் கிலி பிடித்துப் போயிருந்தாள். நல்லவேலையை அப்படி எதுவும் நடவாததால் நம் சமூகம் தப்பியது! 

எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நான் நினைத்தாலும்,  என் ஆழ் மனது அந்த சாபத்தை எனக்கு நினைவு படுத்திக் கொண்டிருந்தது. அது என்னவென்றால்..[இருங்க ஒரு  பொசிஷன்ல போய் நின்னுக்குறேன்...]

ஒரு பதினாறு, பதினேழு வருடம் இருக்கும். பஸ் பாஸ் வாங்க நண்பர்கள் புடை சூழ போயிருந்தேன். என் பாசை வாங்கிக் கொண்டு பாக்கி சில்லறைக்காக காத்திருந்தேன். பாஸ் கொடுப்பவர், சில்லறை இல்லை என்றார். சரி பாக்கி சில்லறையை என் பின்னால் வரும் நண்பனின் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள், அவனிடம் பைசா கம்மியாக இருக்கிறது என்றேன். அவர் கடுப்புடன் என்னை பார்த்து விட்டு, வயிறு முதல் நெஞ்சு வரை எறிந்து, இந்தா பிடி சாபம் என்பது போல் "உனக்கு அஞ்சு போட்ட புள்ள பொறக்கும் போ" என்றார். ஒன்றுமில்லை, பாஸ் விலை, ஏதோ கால் ரூவாயில் முடியும் என்று ஞாபகம். என்னிடம் முப்பது காசு இருந்தது. கால் ரூவாய் போக, ஐந்து பைசாவுக்காக காத்திருந்தேன். சில்லறை இல்லை என்றவுடன், நான் விட்டு விட்டு சென்று விடுவேன் என்று நினைத்திருக்கிறார் அவர்! என் பின்னால் வந்தவனிடமோ இருபது பைசா தான் இருந்தது. அதை அங்கே அட்ஜஸ்ட் செய்து கொள்ள ஒரு உபாயம் சொன்னேன். அந்த பரதேசிக்காக நான் வாதாடப் போய் விமோசனமே இல்லாத ஒரு சாபத்தை பெற்றுக் கொண்டேன்! அவர் சாபம் பலிக்கத் தான் ஆரம்பித்து விட்டது போலும்! இன்னும் நாலு பாக்கி இருக்கு!! பாக்கலாம்..

பெண் குழந்தை என்றால் சாபமா என்று நீங்கள் என்னை கேட்கலாம். அரசு வேலையில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்க்கும் அவரை பொறுத்தவரை பெண் குழந்தைகள் என்றால் சாபம் தானே? அதனால் அவர் என்னை அப்படி சபித்திருக்கலாம், சபித்திருக்கலாம் என்று சொல்லே தவறு! சொல்லியிருக்கலாம்!! அதிலும் எனக்கு ஐந்து பெண் குழந்தைகள் என்று சொன்னார். [என்னா ஒரு வில்லத்தனம்!!] ஒரு ஐந்து பைசா மனிதனை எந்த அளவுக்குத் தள்ளுகிறது! என்னை பொறுத்தவரை அவர் என்னை வயிறெரிந்து சபித்ததாக நினைத்து கொண்டு என்னை அளவுக்கு மீறி ஆசிர்வதித்து விட்டார் என்று தான் தோன்றுகிறது. பாக்கலாம்...

அப்பாவுக்கும், மகளுக்குமான உறவு என்றுமே அலாதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இனி நானே என் சொந்த அனுபவத்தில் உணரப் போகிறேன். ஏனோ தெரியவில்லை, ஆண் குழந்தையை நல்லவனாய் வளர்க்கத் தோன்றுகிறது பெண் குழந்தையை பாதுகாப்பாய் வளர்க்கத் தோன்றுகிறது.  இப்போதே என் மகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தை பிறந்து ஐந்து நாள் ஆகிவிட்ட போதும், என் பார்வைக்கு அவள் தீர்ந்து போகவே இல்லை. அவ்வளவு மெல்லிய, கறைபடியாத, தூய்மையான ஜீவன் பரிசுத்தமாய் என் முன்னே உறங்குகிறது.  உறங்கும் குழந்தையை நீங்கள் சிறிது நேரம் பார்த்ததுண்டா? அதை விட ஒரு அற்புதமான கணம் இந்த உலகில் உண்டா? ஒரு குழந்தையை அவ்வளவு அருகில் தொடர்ந்து பார்க்கும்போது நாமும் குழந்தையாய் மாறி விடுகிறோம் என்று தோன்றுகிறது. இல்லையென்றால்  குழந்தை சோம்பல் முரிப்பதையும், கொட்டாவி விடுவதையும் தூக்கத்தில் சிரிப்பதையும் கண்டு நாம் அத்தனை ஆச்சர்யப்பட மாட்டோம். குழந்தைகள் எப்படி சின்ன சின்ன விஷயத்தை ஆச்சர்யமாய் பார்க்கிறதோ, அதே போல், நாமும், ஒரு குழந்தை இயல்பாய் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கண்டு சிலாகிக்கிறோம். 

அபியும் நானும் படத்தில் சொன்னதை போல,

ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போது ஒரு தகப்பனும் பிறக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்து விடுகின்றன, ஆனால் சில தகப்பன்கள் வளர்வதே இல்லை!

அப்படி நடக்காமல் நானும் என் மகளுடன் சேர்ந்து வளரப் போகிறேன். இனி வரும் காலங்களில் என் மகளிடம் நான் கற்ற பாடங்களை இங்கு பதிவு செய்வேன் என்பதில் சந்தேகமில்லை.

"எந்தன் வாழ்க்கையில் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே
நானும் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்துதித்து உயிரில் கலந்தாய் என் உயிரே"

5 Responses
  1. Vanila Says:

    Wow!! Pradeep. Evlo Azhaga ezhutha eppadi kathukitte?. Unnoda anubavathai konjam nagaichuvai konjam serious maater ellam serthu super-a nachunnu ezhuthi irukke. Kutty ponnai seekirame neril paarkanumnra aavalai create pannitte.


  2. thank u vanila :-) unga commentai paathaale neenga ithai romba rasichchi padichurukeengannu teriyuthu. thank u so much.


  3. வாழ்த்துகள் பிரதீப்:)

    நல்ல வேளை, சில்லறை பிரச்சினை ஐந்து பைசாவோடு நின்றது. :)


  4. Anonymous Says:

    Congrats! Welcome to the club of proud fathers of beatiful girls!!


  5. Unknown Says:

    பிரதீப்,
    டிரீட் எங்க? எனக்கு சென்னையில வேலை கிடைச்சுடுச்சு. வந்து வாங்கிக்குறேன்